இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வியியலாளரும், எழுத்தாளரும், வளவாளருமான எம்.எச்.எம். நாளிர் ஆசிரியர் அவர்களின் மறைவையொட்டி, அவரை நினைவு கூரும் விசேட நிகழ்வொன்று கொழும்பு ‘ஸலாமா சொசைட்டி’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நடைபெற்றது.
1943 ஆம் ஆண்டு வெலிகமையில் பிறந்த நாளிர் ஆசிரியர், தேசிய கல்வி நிறுவகத்தில் பணியாற்றி இஸ்லாம் பாடத்திட்டம், பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் அஹதிய்யா பாடத்திட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியதுடன், பின்தங்கிய மாணவர்கள் வெளிவாரிப் பட்டதாரிகளாக உருவாவதற்கும் வழிகாட்டினார்.
கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி காலமான அன்னாரது கல்வி மற்றும் சமூகச் சேவைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நினைவேந்தல் நிகழ்வு, ‘ஸலாமா சொசைட்டி’ அமைப்பின் தலைவர் அஷ்-ஷைக் ஆஸாத் அப்துல் முஈத் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அஷ்-ஷைக் ஜஸார் ஜவ்பர், அஷ்-ஷைக் புஹாரி மற்றும் டொக்டர் சைபுல் இஸ்லாம் ஆகியோர் உரை நிகழ்த்தியதுடன் பலரும் அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நாளிர் ஆசிரியர் அவர்களின் குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலர் கலந்துகொண்டு அன்னாருக்கான பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்
Isbahan Sharfdeen அவர்கள் தொகுத்து வழங்கினார்






























