وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
‘உங்களில் ஓர் பிரிவினர் நன்மைகளை நோக்கியழைப்பதற்காக எப்பொழுதும் செயற்பட வேண்டும். அவர்கள் நல்ல விடயங்களை ஏவுவதுடன் தீயவற்றைத் தடுக்கவும் வேண்டும். இப்பணியைச் செய்பவர்களே உண்மையில் வெற்றியாளர்கள் ஆவர்.’ (ஆல இம்ரான் 104) என்ற அல்குர்ஆனின் சிந்தனையை நாம் ஆழ்ந்து நம்புகிறோம்.
எனவே, நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் எனும் உன்னதமான பணிக்காக, இலங்கையில் எண்பதுகளுக்கு முன்பிருந்தே ஒரு இஸ்லாமிய அமைப்பாக நாம் செயற்பட்டு வருகிறோம்.
உலகில் மனித வாழ்வை உயர்ந்த விழுமியங்களுடன், ஒழுங்கமைப்பதற்கான இறைவழிகாட்டலே இஸ்லாம் என்றும், முழு மனித சமுதாயத்திற்குமுரிய நற்போதனைகளை அது வழங்குகிறது என்றும், அது ஒரு சம்பூரணமானதும் – நடுநிலையானதுமான மார்க்கம் என்றும், எந்தவிதமான தீவிர நிலைகளும் அதில் காணப்பட மாட்டாது என்றும், அது மனித வாழ்வை நிம்மதி – சந்தோஷம் – சுபீட்சம் நோக்கி வழிநடாத்துகிறது என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம்.
நாம் இலங்கையின் பிரஜைகள் என்ற வகையில், தேச நலனும், அதன் ஒருமைப்பாடும் எமது செயற்பாட்டில் பிரதானமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. நாம் இன, மத, பௌதீக வேறுபாடுகளைத் தாண்டி எல்லா மனிதர்களுக்காகவும் தொழிற்படுகிறோம். எமது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் எப்பொழுதும் நடுநிலைத் தன்மையைக் கடைபிடிப்பதுடன், அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயலாற்றுவதே எமது அணுகுமுறையாகும்.